தலை முடியை சரிவர பராமரிக்காமல் விட்டால் அதன் மென்மையும் பளபளப்பும் குறைந்துவிடும். வறண்ட தன்மை நிலவும். முடியும் சத்து இழந்து காணப்படும். அதனால் தலை முடியை மென்மையாக்க சில
வழிமுறைகள் இதோ:
ஒரு கப் அளவுக்கு வெங்காயத்தையும் முட்டைக் கோசையும் பொடி பொடியாக நறுக்கி அதை ஒரு செப்பு பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்து விடவேண்டும். காலையில் அதில் சிறிது யூடி கோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாற்றுடன் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியின் கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து சீயக்காய் பொடி போட்டு குளித்தால் முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றமடையும்.
சிலருக்கு கூந்தல் வறண்டு போய் இருப்பதைக் காணலாம். அவர்கள் ஒரு கிண்ணத்தில் மருதாணிபொடி, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து குளிக்க முடி மென்மையாக மாறும். ஒரு வித பளபளப்பும் தெரியும்.
அவரவரும் உபயோகிக்கும் ஷாம்புடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடியறுந்து போகாமல் இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் காயவைத்த செம்பருத்தி பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வெயிலில் வைத்துவிடவும். அதை தினசரி தலையில் தேய்த்து பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாக மாறும்பொழுது நல்ல பளபளப்பு கிடைக்கும். தலை முடியிலும் ஒரு மென்மை தன்மை பரவும்.
அடிக்கடி தட்டையான பிரஸ் கொண்டு தலை வாருவதால் ரத்த ஓட்டமானது முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை சீராக பாய்கிறது. இதனால் முடி பளபளப்புடன் இருக்கும்.
கூந்தல் பறக்காமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்றவற்றையும் முடியை உலரவைக்க ஹேர் டிரையரையும் அடிக்கடி உபயோகப்படுத்தாமல் இருந்தால் முடியில் வறட்சி ஏற்படாது. மேலும் முடியை சுருளாக்குதல் ஸ்ட்ரைட் செய்தல், கலர் மாற்றம் செய்தல், ப்ளீச் செய்தல் இவற்றின் மூலம் முடியின் இயற்கை தன்மை மாறிவிடும்.
இதனால் கூந்தலின் மென்மையும் , பளபளப்பும் குறைந்துவிடும். ஆதலால் இது போன்று முடியில் அடிக்கடி செய்யாமல் இருந்தால் முடி வறட்சியில் இருந்து தப்பிக்கலாம். தலைமுடியும் மென்மையாகும்.